ஸ்ரீரங்கத்தில் நம்மாழ்வார் மோட்ச நிகழ்வுடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவு
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ரங்கநாதர் திருக்கோயிலில், நம்மாழ்வாருக்கு மோட்சம் வழங்கும் நிகழ்வுடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா வெகு விமரிசையாக நிறைவடைந்தது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் கடந்த டிசம்பர் 19ஆம் தேதி திருநெடுந்தாண்டகம் உற்சவத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தொடர்ந்து பத்து நாட்கள் பகல் பத்து உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. அதன் பின்னர், ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான டிசம்பர் 30ஆம் தேதி, பரமபத வாசல் என அழைக்கப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு நடைபெற்றது.
ராப்பத்து உற்சவத்தின் இறுதி நாளான பத்தாம் நாளில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது, திருஆபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்ட நம்பெருமாள், சொர்க்கவாசலை கடந்து சந்திரபுஷ்கரணி தீர்த்தத்துக்கு எழுந்தருளினார்.
வேத மந்திரங்கள் முழங்க, நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி செய்தருளி, பின்னர் திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதன் தொடர்ச்சியாக நம்மாழ்வாருக்கு மோட்சம் வழங்கப்பட்டதுடன், வைகுண்ட ஏகாதசி திருவிழா முறையாக நிறைவு பெற்றது.
இந்த புனித நிகழ்வுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தியுடன் தரிசனம் செய்தனர்.