குளிர்கால ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் செல்லும் அபிநவ் பிந்த்ரா
அடுத்த ஆண்டு பிப்ரவரி 6 முதல் 22 வரை இத்தாலியின் மிலன் மற்றும் கார்டினா டி’ஆம்பெசோ நகரங்களில் நடைபெறும் 2026 குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கான ஜோதியை இந்திய வீரர் அபிநவ் பிந்த்ரா ஏந்திச் செல்லவுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனது எக்ஸ் (X) பக்கத்தில் அபிநவ் பிந்த்ரா தெரிவித்ததாவது:
“மிலன், கார்டினா நகரங்களில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கான ஜோதி ஓட்டத்தில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டிருப்பது எனக்கு பெருமையும் நன்றியும் அளிக்கிறது. ஒலிம்பிக் ஜோதி எப்போதும் கனவு, விடாமுயற்சி மற்றும் விளையாட்டு ஒற்றுமையின் சின்னமாக இருந்து வருகிறது.
அதை மீண்டும் ஒருமுறை சுமந்து செல்வது எனக்கு மிகுந்த கவுரவமாகும். இது விளையாட்டு உலகம் எவ்வளவு பெரும் ஆற்றலை கொண்டது என்பதை நினைவூட்டுகிறது. இந்த அபூர்வ வாய்ப்பை வழங்கிய ஒலிம்பிக் அமைப்பாளர்களுக்கு மனமார்ந்த நன்றி,” என்று அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக, 2008-ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு வரலாற்றுச் சிறப்பை பெற்றுத் தந்தவர் அபிநவ் பிந்த்ரா என்பதும் குறிப்பிடத்தக்கது.