ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற 2 அரசு ஊழியர்கள் இடைநீக்கம்: கர்நாடகாவில் சர்ச்சை
கர்நாடக மாநிலத்தில் ஆர்எஸ்எஸ் (RSS) அமைப்பின் நிகழ்ச்சியில் பங்கேற்ற இரண்டு அரசு ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் மாநில அமைச்சர் பிரியங்க் கார்கே, முதல்வர் சித்தராமையாவுக்கு எழுதிய கடிதத்தில், “ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் பொது இடப் பயிற்சிகளுக்கு தடை விதிக்கவும், அதில் பங்கேற்கும் அரசு ஊழியர்களுக்கு நடவடிக்கை எடுக்கவும்” கோரியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, ராய்ச்சூர் மாவட்டம் லிங்சாகூரில் அக்டோபர் 12 அன்று நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நிகழ்வில் பங்கேற்ற சிர்வார் வட்டார மேம்பாட்டு அதிகாரி பிரவீன் குமார் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
அதேபோல், பசவகல்யாண் தாலுகாவில் அரசு மாணவர் விடுதியில் சமையலராக பணியாற்றிய பிரமோத், அதே நிகழ்ச்சியில் பங்கேற்று புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். இதையடுத்து, அவரையும் வட்டாட்சியர் மஞ்சுநாத் இடைநீக்கம் செய்துள்ளார்.
அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற விவரங்களைத் திரட்டும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கைக்கு பாஜக, ஆர்எஸ்எஸ், மற்றும் பஜ்ரங் தளம் உள்ளிட்ட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.