அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸின் இல்லம் மீது தாக்குதல் – சம்பவத்தின் பின்னணி என்ன?
அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸின் ஓஹியோ மாநில இல்லத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான பின்னணி விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ஓஹியோ மாநிலம் சின்சினாட்டி நகரின் ஈஸ்ட் வால்நட் ஹில்ஸ் பகுதியில், வில்லியம் ஹோவர்ட் டாஃப்ட் டிரைவ் என்ற இடத்தில் ஜேடி வான்ஸின் குடியிருப்பு அமைந்துள்ளது. துணை அதிபர் வான்ஸும் அவரது மனைவி உஷாவும் இந்த வீட்டை 2018 ஆம் ஆண்டு சுமார் 12.63 கோடி ரூபாய் மதிப்பில் வாங்கியுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை, வான்ஸ் இல்லம் உள்ள பகுதிக்கு நோக்கி சந்தேகத்திற்கிடமான வகையில் ஓடிக்கொண்டிருந்த ஒருவரை கவனித்த அமெரிக்க ரகசிய சேவை அதிகாரி, உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். அதன்பின், வீட்டில் இருந்து கண்ணாடி உடையும் சத்தம் கேட்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ஒரு இளைஞர் சுத்தியலால் ஜன்னலை உடைத்து வீட்டுக்குள் நுழைய முயன்றதை கண்டனர்.
மேலும், துணை அதிபரின் இல்லத்துக்கு செல்லும் பாதையில் நிறுத்தப்பட்டிருந்த ரகசிய சேவை வாகனத்தையும் அந்த நபர் தாக்கியதாக தெரியவந்துள்ளது. தாக்குதல் நடந்த நேரத்தில் வீட்டில் வான்ஸின் குடும்பத்தினர் யாரும் இல்லாததால், பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அந்த நபர் வீட்டுக்குள் நுழைய முடியவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவத்துக்குப் பிறகு வெளியான புகைப்படங்களில், வான்ஸ் இல்லத்தில் உள்ள பல ஜன்னல்கள் உடைக்கப்பட்டிருப்பது தெளிவாக காணப்படுகிறது. ஒவ்வொரு ஜன்னலுக்கும் ஏற்பட்ட சேதம் சுமார் 25.28 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக சின்சினாட்டி அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 26 வயதுடைய வில்லியம் டிஃபூர் என்பவர் மீது, சொத்துச் சேதம், நாசவேலை, அரசு பணியைத் தடை செய்தல் மற்றும் அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சின்சினாட்டியில் பிறந்த டிஃபூர், பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் திருநங்கையாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. கடந்த மாதம் ‘ஜூலியா’ என்ற பெயரில் அவர் சமூக வலைதள கணக்கொன்றை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த கணக்கில் உள்ள விவரங்களின்படி, டிஃபூர் 2018 ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளி கல்வியை முடித்துள்ளார். பின்னர் சின்சினாட்டி பல்கலைக்கழகத்தின் இசைக் கல்லூரி பாதுகாப்பகப் பிரிவில் பயின்ற அவர், படிப்பை இடைநிறுத்தி, கடந்த ஆண்டு சின்சினாட்டி ஸ்டேட் தொழில்நுட்ப மற்றும் சமூகக் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.
ஓஹியோ மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளராக உள்ள டிஃபூர், எந்த அரசியல் கட்சியை ஆதரிக்கிறார் என்பது இதுவரை தெளிவாகவில்லை. அவரது தந்தை வில்லியம் ஒரு பிரபல அறுவை சிகிச்சை மருத்துவராகவும், தாய் கேத்தரின் புகழ்பெற்ற குழந்தை மருத்துவராகவும் இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஜனநாயகக் கட்சியை ஆதரிக்கும் டிஃபூரின் தந்தை, கமலா ஹாரிஸின் தேர்தல் பிரச்சாரத்துக்கு 11,600 டாலருக்கும் அதிகமாக நன்கொடை வழங்கியுள்ளதாகவும், 2020 ஆம் ஆண்டு ஜோ பைடனின் அதிபர் தேர்தல் பிரச்சாரத்திற்கும் கணிசமான தொகை அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு முன்பு, 2023 ஆம் ஆண்டு அமெரிக்க சுகாதார மனநல அவசர சேவை மையத்தில் அத்துமீறி நுழைந்த வழக்கில், டிஃபூர் 10,000 டாலர் பிணையில் வெளியே இருந்துள்ளார். அந்த வழக்கில், விசாரணைக்கு தகுதியற்ற மனநல நிலை என நீதிபதி கருதி, குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்துள்ளார்.
அதேபோல், கடந்த ஆண்டு ஹைட் பார்க்கில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் ஜன்னல்கள் உடைக்கப்பட்ட சம்பவத்திலும் டிஃபூர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கும் மனநலப் பிரிவு விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதல் தொடர்பாக அக்கறை காட்டிய அனைவருக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த ரகசிய சேவை மற்றும் சின்சினாட்டி காவல்துறைக்கும் நன்றி தெரிவித்துள்ள துணை அதிபர் ஜேடி வான்ஸ், வீட்டின் உடைந்த ஜன்னல்களின் புகைப்படங்களை வெளியிட்டு செய்தி வெளியிட்ட ஊடகங்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதற்கிடையே, இந்த சம்பவம் துணை அதிபரின் குடும்பத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலா என்ற கோணத்திலும் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.