வங்கதேசத்தில் ஒரே நாளில் இரு இந்து வணிகர்கள் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு – பரபரப்பு
வங்கதேசத்தில் ஒரே நாளில் இரண்டு இந்து வியாபாரிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், அந்நாட்டில் கடும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேச மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டின் பல பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் தீவிரமடைந்து வருகின்றன.
இந்நிலையில், வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், சிறுபான்மை சமூகமான இந்துக்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஏற்கனவே நான்கு இந்துக்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ஜஷோர் மாவட்டம் கோபாலியா சந்தையில் வாங்கச் சென்றிருந்த ராணா பிரதாப் என்பவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
அதேபோல், நரசிங்கடி மாவட்டம் சார்சிந்தூர் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வந்த மணி சக்ரபர்த்தி என்பவரையும் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர்.
கடந்த 18 நாட்களில் மட்டும் ஆறு இந்துக்கள் கொல்லப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதால், வங்கதேசத்தில் வாழும் இந்து சமூகத்தினர் மத்தியில் கடும் அச்சநிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.