பிரதமர் மோடியின் இராஜதந்திர நகர்வு : யூனுஸை ஓரங்கட்டும் இந்தியா
பாகிஸ்தானின் ஆதரவுடன் செயல்படும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளின் கட்டுப்பாட்டுக்குள் வங்கதேசம் முழுமையாகச் சிக்கிவிடும் சூழல் உருவாகுவதற்கு முன்பாகவே, அந்நாட்டில் மீண்டும் ஜனநாயக ஆட்சி வேரூன்ற வேண்டும் என்ற நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மிகுந்த நுணுக்கத்துடனும், பொறுப்புணர்வுடனும், வெளிப்படையான பரபரப்பில்லாமல் அமைதியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அதனை விளக்கும் செய்தித் தொகுப்பாக இது அமைந்துள்ளது.
இந்தியாவுக்குப் பொருத்தவரை வங்கதேசம் ஒரு சாதாரண அண்டை நாடு மட்டுமல்ல. கிழக்குப் பகுதியின் அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் அடித்தளமாக விளங்கும் நாடாகவும், நில எல்லை மற்றும் கடல் பாதுகாப்பிற்கான முக்கிய காவல் அரணாகவும், வங்காள விரிகுடா சார்ந்த புவியியல் அரசியலில் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாகவும், பயங்கரவாத அமைப்புகளைத் தடுக்க உதவும் பாதுகாப்புக் கவசமாகவும் வங்கதேசம் திகழ்கிறது.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசு வீழ்ந்ததற்குப் பிறகு, வங்கதேசத்தில் ஜனநாயகத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாக மாறியுள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இடைக்கால அரசின் தலைமை பொறுப்பை ஏற்ற முகமது யூனுஸ், அடிப்படைவாத இஸ்லாமிய சக்திகளுடன் நெருக்கம் காட்டி, இந்தியாவுக்கு எதிரான வெறுப்புச் சிந்தனைகளுக்கு வெளிப்படையாக வழி திறந்துள்ளதாக கூறப்படுகிறது. வங்கதேசத்தை “வங்காள பாகிஸ்தான்” போல மாற்றும் முயற்சிகளில் அவர் ஈடுபடுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஜூலை மாத போராட்டங்களில் பங்கேற்ற மாணவர் அமைப்புகள் இணைந்து, “தேசிய குடிமக்கள் கட்சி” (NCP) என்ற புதிய அரசியல் அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த கட்சி அரசியல் மாற்றம் குறித்து பேசுவதாக கூறிக்கொண்டே, இந்தியாவை கடுமையாக விமர்சிக்கும் நிலைப்பாட்டை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது.
கடந்த 11 மாத காலமாக, இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களையே தங்களது அடையாளமாக NCP முன்னிறுத்தி வந்துள்ளது.
இந்நிலையில், வங்கதேச சுதந்திரத்திற்கே எதிராக இருந்த தீவிரவாத இஸ்லாமிய அமைப்பான ஜமாத்-இ-இஸ்லாமியுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கப் போவதாக NCP அறிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல், வங்கதேசத்தின் மற்றொரு முக்கிய அரசியல் கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி (BNP), ‘ஜமியத் உலமா-இ-இஸ்லாம்’ உள்ளிட்ட பல இஸ்லாமிய அமைப்புகளுடன் தேர்தல் கூட்டணியை உருவாக்கியுள்ளது.
இந்தியாவுடன் நல்லுறவைப் பேணி வந்த ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், வரவிருக்கும் வங்கதேச தேர்தல் பெரும்பாலும் இஸ்லாமிய அரசியல் சக்திகளுக்கிடையேயான போட்டியாக மட்டுமே மாறும் சூழல் உருவாகியுள்ளது.
இதற்கிடையே, வங்கதேச தேசியவாத கட்சியின் செயல் தலைவரான தாரிக் ரஹ்மான், 17 ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பிய சில தினங்களிலேயே, அவரது தாயாரும் வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமருமான கலீதா ஜியா 80 வயதில் காலமானார்.
கலீதா ஜியாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்க வங்கதேசம் சென்ற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பிரதமர் மோடியின் தனிப்பட்ட இரங்கல் கடிதத்தை தாரிக் ரஹ்மானிடம் நேரில் வழங்கியதுடன், அவருடன் முக்கிய ஆலோசனையும் மேற்கொண்டார். இதுபோன்ற நடவடிக்கை இந்தியா – வங்கதேச உறவுகளில் இதுவரை இல்லாத ஒன்று என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகத்திற்கு சென்ற மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் பதிவேட்டில் இந்திய அரசின் சார்பில் இரங்கல் செய்தியை பதிவு செய்தார்.
இந்த இரங்கல் கடிதத்தை ஒரு வழக்கமான மரியாதை நடவடிக்கையாக மட்டும் பார்க்கக் கூடாது என்றும், தேர்தலுக்குப் பிறகு பிரதமர் பதவிக்கு அதிக வாய்ப்பு உள்ள தாரிக் ரஹ்மான் தலைமையிலான BNP அரசுடன் இணைந்து செயல்பட இந்தியா தயாராக இருப்பதற்கான வெளிப்படையான சமிக்ஞை இது என்றும் அரசியல் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
இதற்கு முன்பாக, 2024 டிசம்பர் மாதத்தில் மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி டாக்கா சென்று, இடைக்கால அரசின் தலைமை ஆலோசகரான முகமது யூனுஸுடன் பேச்சுவார்த்தை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல், இந்திய இராணுவத்தின் தலைமைத் தளபதியான ஜெனரல் உபேந்திர திவேதி, வங்கதேசத்தில் அதிகரித்து வரும் இந்திய எதிர்ப்பு பிரச்சாரங்கள் மற்றும் பாதுகாப்பு நிலை குறித்து, அந்நாட்டு இராணுவத் தலைவர் வக்கர்-உஸ்-ஜமானுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
இந்த அனைத்து நடவடிக்கைகளும், வங்கதேசம் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளின் செல்வாக்கிலிருந்து விலகி, மதச்சார்பற்ற மற்றும் விடுதலைப் போராட்டத்தின் அடிப்படையில் உருவான தனது அடையாளத்தை பாதுகாக்கும் ஒரு பொறுப்பான அரசால் நிர்வகிக்கப்பட வேண்டும் என்ற இந்தியாவின் எதிர்பார்ப்பை வெளிப்படுத்துகின்றன.
தேசிய துக்கத்தில் பங்கேற்பது, தாரிக் ரஹ்மானுக்கு இரங்கல் கடிதம் வழங்குவது போன்ற நடவடிக்கைகள் மூலம், இந்தியா புதிய இராஜதந்திரப் பாதையை உருவாக்கி, தன் அரசியல் நலன்களோடு மட்டுமல்லாமல், வங்கதேச அரசியலையும் ஜனநாயகப் பாதைக்கு திருப்ப முயற்சிக்கிறது.
இதன் மூலம், வங்கதேசத்தின் மதச்சார்பற்ற ஜனநாயக அடையாளத்திற்கு எந்தவித அச்சுறுத்தலும் ஏற்பட்டால், இந்தியா அமைதியாகக் கண்டு கொள்ளாமல், தேவையான அரசியல் மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகளை உறுதியாக எடுக்கும் என்பதையும் தெளிவாக பதிவு செய்துள்ளது.