வெனிசுலா அதிபர் கைது – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
வெனிசுலா நாட்டின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, அமெரிக்க ராணுவத்தினரால் பிடிபட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
சமீப காலமாக அமெரிக்க ராணுவம், வெனிசுலாவைச் சேர்ந்த கடற்படகுகளை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த படகுகள் வழியாக வெனிசுலாவிலிருந்து போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாகவும், இதற்கு அதிபர் நிக்கோலஸ் மதுரோ நேரடியாக ஆதரவளித்து வருவதாகவும் அமெரிக்கா குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது.
இந்த சூழலில், வெனிசுலா தலைநகர் காரகஸ் நகரத்தை நோக்கி அமெரிக்க விமானப்படை 7 இடங்களில் தாக்குதல் நடத்தியது. ராணுவ முகாம்கள் மற்றும் விமானப்படை தளங்கள் உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புகளை குறிவைத்து இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. நகரின் வான்பகுதியில் போர் விமானங்கள் தாழ்வாக பறந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.
இதனைத் தொடர்ந்து, வெனிசுலா முழுவதும் அவசர நிலை அமல்படுத்தப்படுவதாக அதிபர் நிக்கோலஸ் மதுரோ அறிவித்தார். மேலும், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்துவதாகவும், இந்த தாக்குதல்கள் வெனிசுலா ராணுவத்திற்கோ அல்லது தனக்கோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும், அவரது மனைவி சிலியா புளோரஸும் அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், இந்த நடவடிக்கை அமெரிக்க சட்ட அமலாக்க அமைப்புகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.