சைக்கிளில் உலகச் சுற்றுலா மேற்கொள்ளும் ஜெர்மன் பெண்!
சைக்கிளில் உலக நாடுகளைச் சுற்றி வரும் ஜெர்மன் நாட்டுப் பெண் ஒருவர், பொள்ளாச்சியின் இட்லி மற்றும் தோசை தன்னை மிகவும் கவர்ந்ததாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியைச் சேர்ந்த 47 வயதான உர்சுலா, உலகம் முழுவதும் நிலப்பாதை வழியாக சைக்கிளில் பயணம் செய்யும் தனித்துவமான சுற்றுலாவை கடந்த மே மாதத்தில் தொடங்கியுள்ளார்.
மொத்தமாக சுமார் 10,000 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் கடக்கத் திட்டமிட்டுள்ள அவர், இதுவரை 17 நாடுகளை கடந்தும் 9,000 கிலோமீட்டருக்கு மேற்பட்ட பயணத்தை நிறைவு செய்தும் தற்போது இந்தியாவை வந்தடைந்துள்ளார்.
தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகேயுள்ள ஆனைமலை பகுதிகளில் உர்சுலா சைக்கிளில் சுற்றுலா மேற்கொண்டுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக மக்கள் மிகுந்த மரியாதையுடனும் அன்போடும் பழகியதாக கூறினார்.
மேலும், தமிழக பாரம்பரிய உணவுகள் தன்னை பெரிதும் ஈர்த்ததாகக் குறிப்பிட்ட உர்சுலா, பொள்ளாச்சி தேங்காய் சட்னி, இட்லி, மசாலா தோசை, கிச்சடி போன்ற உணவுகளை விரும்பி சுவைத்ததாக தெரிவித்தார்.
இந்தியப் பயணம் நிறைவடைந்து ஜெர்மனிக்கு திரும்பிய பின்னர், தமிழகத்தைச் சுற்றுலா தலமாகத் தன் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு பரிந்துரைப்பேன் என்றும் அவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.