பொருளாதார வீழ்ச்சியால் புதிய நெருக்கடியில் பாகிஸ்தான் – அதிகரிக்கும் புலம்பெயர்வு

Date:

பொருளாதார வீழ்ச்சியால் புதிய நெருக்கடியில் பாகிஸ்தான் – அதிகரிக்கும் புலம்பெயர்வு

பெரும் கடன் சுமை, கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் தொடரும் அரசியல் நிலையற்ற தன்மை காரணமாக பாகிஸ்தான் தற்போது புதிய சிக்கலை எதிர்கொண்டு வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருந்த கல்வியறிவு பெற்ற தொழில்முறை நிபுணர்கள், குறிப்பாக மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்கள், தங்கள் தாயகத்தை விட்டு வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்து வருவது அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாடுகளில் பணியாற்றி வரும் பாகிஸ்தானியர்கள் தாயகம் திரும்பி வருவதாக ராணுவ தளபதி அசீம் முனீர் கூறியிருந்த நிலையில், வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் அதற்கு முற்றிலும் மாறான நிலையை வெளிப்படுத்துகின்றன. கடந்த 24 மாதங்களில் மட்டும் சுமார் 5,000 மருத்துவர்கள் மற்றும் 11,000 பொறியாளர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேறியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே பன்னாட்டு நிறுவனங்கள் தொடர்ச்சியாக செயல்பாடுகளை நிறுத்தி வெளியேறி வருகின்றன. மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட பல தொழில்நுட்ப நிறுவனங்கள் நாட்டை விட்டு விலகிய நிலையில், உலகின் நான்காவது பெரிய ஃப்ரீலான்சிங் மையமாகக் கருதப்படும் பாகிஸ்தானில் இணைய வசதி சரியாக இல்லாததால் மட்டும் 1.62 பில்லியன் டாலர் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் செனட்டர் முஸ்தபா நவாஸ் கோக்கர் தெரிவித்துள்ளார். இதனால் சுமார் 2.37 மில்லியன் ஃப்ரீலான்சிங் வேலைவாய்ப்புகள் ஆபத்தில் உள்ளன என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், Pakistan’s Bureau of Emigration and Overseas Employment வெளியிட்டுள்ள அறிக்கை மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2024ஆம் ஆண்டில் மட்டும் 7 லட்சத்து 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகப் பதிவு செய்துள்ளனர். கடந்த 11 மாதங்களில் சுமார் 6 லட்சத்து 87 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நாட்டை விட்டு வெளியேற விண்ணப்பித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பாகிஸ்தானியர்கள் வெளிநாடுகளில் பிச்சை எடுப்பதாக சவூதி அரேபியா உள்ளிட்ட சில இஸ்லாமிய நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன. பிச்சை எடுத்தல் மற்றும் சட்டவிரோத குடியேற்றம் காரணமாக ஆயிரக்கணக்கானோர் வளைகுடா நாடுகள் மற்றும் பிற நாடுகளிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து, ‘தொழில்முறை பிச்சைக்காரர்கள்’ மற்றும் முழுமையான ஆவணங்கள் இல்லாத பயணிகள் வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்படும் என உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி அறிவித்திருந்தார்.

பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், மருத்துவர்கள், செவிலியர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட படித்த பட்டதாரிகளும் அதிக அளவில் வெளிநாடுகளில் வேலை தேடி செல்லத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, 2011 முதல் 2024 வரை செவிலியர்களின் புலம்பெயர்வு 2,144 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் போக்கை கட்டுப்படுத்தும் முயற்சியாக பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு அனைத்து விமான நிலையங்களிலும் கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, இந்த ஆண்டில் மட்டும் சுமார் 66,154 பேர் விமான நிலையங்களில் இருந்து பயணிக்க அனுமதிக்கப்படாமல் தடுக்கப்பட்டுள்ளனர். இது முந்தைய ஆண்டைவிட கிட்டத்தட்ட இரட்டிப்பு என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் டம்பாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ராணுவ தளபதி அசீம் முனீர், வெளிநாடுகளில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் நாட்டின் பெருமையை உயர்த்தும் ‘மூளை ஆதாயம்’ எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், நாட்டை விட்டு திறமையானவர்கள் தொடர்ந்து வெளியேறி வரும் சூழலில், அவரது இந்தக் கருத்துகள் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றன.

நெட்டிசன்கள் பலர், பாகிஸ்தானில் நிலவும் கடுமையான அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலை காரணமாக திறமையான நபர்கள் நாட்டில் தங்க விரும்பவில்லை என்றும், தற்போதைய நிலைமை நாட்டின் எதிர்காலத்திற்கு பெரும் அபாயத்தை ஏற்படுத்தும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மொத்தத்தில், திறமையான மனித வளம் தொடர்ச்சியாக பாகிஸ்தானை விட்டு வெளியேறி வரும் இந்த நிலை, அந்நாட்டின் பொருளாதாரமும் நிர்வாகமும் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக மாறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பனிப்புயல் தாக்கம் : நியூயார்க், நியூஜெர்சி மாகாணங்களில் கடுமையான பாதிப்பு – 1,500க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

பனிப்புயல் தாக்கம் : நியூயார்க், நியூஜெர்சி மாகாணங்களில் கடுமையான பாதிப்பு –...

சிறுமலை வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ – அரிய வகை மரங்கள், மூலிகைகள் சேதம்

சிறுமலை வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ – அரிய வகை மரங்கள்,...

கோவை: பேருந்து சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி பெண் உயிரிழப்பு – கணவன் கண்முன்னே நேர்ந்த கோர விபத்து

கோவை: பேருந்து சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி பெண் உயிரிழப்பு –...

இலவச புற்றுநோய் பரிசோதனை வாகனத்தை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் எல்.முருகன்

இலவச புற்றுநோய் பரிசோதனை வாகனத்தை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் எல்.முருகன் நீலகிரி...