வங்கதேச தேர்தல் களம்: பிரதமர் கனவுடன் நாடு திரும்பும் கலீதா ஜியாவின் மகன்
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனும், அவரது அரசியல் வாரிசுமான வங்கதேச தேசியவாதக் கட்சியின் (BNP) செயல் தலைவர் தாரிக் ரஹ்மான், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தாய்நாட்டுக்கு திரும்ப உள்ளார். 17 ஆண்டுகளுக்குப் பின்னர் வங்கதேசம் திரும்பவுள்ள தாரிக்குக்கு, கட்சி தரப்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கத் தயாராகி வருகின்றனர். இதன் அரசியல் பின்னணியை விளக்கும் செய்தி தொகுப்பு இதுவாகும்.
வங்கதேச அரசியல் வரலாறு என்பது, முன்னாள் பிரதமர்களான ஷேக் ஹசீனா மற்றும் கலீதா ஜியா ஆகிய இரு குடும்பங்களின் அதிகாரப் போட்டியாகவே நீண்ட காலமாக இருந்து வருகிறது. தேசிய அரசியல் தலைமையின் மையமாக விளங்கும் இந்த இருவரும், பல ஆண்டுகளாக மாறி மாறி நாட்டின் பிரதமர் பதவியை வகித்து வந்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற மாணவர் போராட்டங்கள் தீவிரமடைந்ததன் விளைவாக, பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதனைத் தொடர்ந்து, வங்கதேச தேசியவாதக் கட்சியின் பொதுச் செயலாளர் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கிர், லண்டனில் வசித்து வந்த தாரிக் ரஹ்மான் விரைவில் நாடு திரும்புவார் என அறிவித்தார்.
வரும் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், தாரிக் ரஹ்மானின் மீள்வரவு அரசியல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இதற்கிடையே, ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவரது அவாமி லீக் கட்சி தடை செய்யப்பட்டிருக்கிறது. அக்கட்சியின் பல மூத்த தலைவர்கள், முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசால் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மற்றொரு புறம், நீண்ட காலமாக சிறை தண்டனை அனுபவித்து வந்த BNP தலைவர் கலீதா ஜியா விடுதலை செய்யப்பட்டுள்ளார். அரசியல் காரணங்களுக்காக சிறையில் இருந்த BNP உறுப்பினர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய ஆதரவால் ஷேக் ஹசீனா தேர்தலில் வெற்றி பெற்றதாக குற்றம்சாட்டிய BNP, கடந்த பொதுத் தேர்தலை புறக்கணித்தது. அதேசமயம், ஷரியா சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தும் ஜமாத்-ஏ-இ-இஸ்லாமி, ஹெஃபாசத்-இ-இஸ்லாம் போன்ற இஸ்லாமிய அமைப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கப்பட்டுள்ளன.
முழுமையான இஸ்லாமிய ஆட்சியை உருவாக்கும் நோக்கில், நாட்டின் சட்ட மற்றும் நிர்வாக அமைப்புகள் மறுசீரமைக்கப்படும் வரை, இந்தியாவுக்கு எதிரான அரசியல் சூழல் தொடர வேண்டும் என்பதே ஜமாத்-ஏ-இ-இஸ்லாமியின் நிலைப்பாடாக உள்ளது. மேலும், வரும் தேர்தலில் எந்த அரசியல் கூட்டணியிலும் இணையப்போவதில்லை என்றும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், அவாமி லீக் தேர்தல் களத்தில் இருந்து விலகியுள்ளதால், BNP கட்சிக்கே வெற்றிவாய்ப்பு அதிகம் என அரசியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர். BNP ஆட்சி அமைக்கும் பட்சத்தில், தாரிக் ரஹ்மானே வங்கதேசத்தின் அடுத்த பிரதமராக பொறுப்பேற்பார் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.
வரவிருக்கும் தேர்தலில், போகுரா–7 தொகுதியில் கலீதா ஜியாவும், கடந்த தேர்தல்களில் வெற்றி பெற்ற போகுரா–6 தொகுதியில் தாரிக் ரஹ்மானும் போட்டியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, கடந்த ஜூன் மாதத்தில், வங்கதேசத்துக்கான அமெரிக்க தூதர் டிரேசி ஆன் ஜேக்கப்சன், லண்டனில் தாரிக் ரஹ்மானை சந்தித்து இந்தியா–வங்கதேச உறவுகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அதே சமயம், லண்டனில் இருந்த முகமது யூனுஸும் தாரிக்குடன் கலந்துரையாடினார். தொடர்ந்து, BNP பொதுச் செயலாளர் தலைமையிலான குழுவும் லண்டனில் தாரிக்குடன் முக்கிய அரசியல் ஆலோசனைகள் நடத்தியது.
ஏற்கனவே, தாரிக் ரஹ்மான் தனது தேர்தல் பிரச்சாரத் திட்டத்தை விரிவாக அறிவித்துள்ளதுடன், ஆட்சிக்கு வந்தால் BNP அரசு மேற்கொள்ள உள்ள தொடர் நடவடிக்கைகளையும் வெளியிட்டுள்ளார். ஆனால், சில இஸ்லாமிய மற்றும் இடதுசாரி தீவிரவாத அமைப்புகளுடன் அவர் இன்னும் மறைமுக தொடர்புகளை வைத்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் தொடர்கின்றன.
மேலும், லண்டனில் உள்ள ஐஎஸ்ஐ அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த தாவூத் இப்ராஹிம் ஆகியோருடன் தாரிக் ரஹ்மான் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும், ஷேக் ஹசீனா மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, மாலத்தீவில் நடந்தது போன்று ‘INDIA OUT’ இயக்கத்தை திட்டமிட்டு முன்னெடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், தேர்தல் வாக்குப்பதிவு நாளிலேயே பொது வாக்கெடுப்பையும் நடத்துவது “தேர்தல் இனப்படுகொலைக்கு” வழிவகுக்கும் என ஜமாத்-ஏ-இ-இஸ்லாமி எச்சரித்துள்ளது. இருப்பினும், இரண்டையும் ஒரே நாளில் நடத்தப்போவதாக முகமது யூனுஸ் அரசு அறிவித்துள்ள நிலையில், தேர்தலை தடுக்க ஜமாத்-ஏ-இ-இஸ்லாமி முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால், தேர்தல் நடைபெறுமா?
தாரிக் ரஹ்மான் வெற்றி பெறுவாரா?
அல்லது தேர்தல் முற்றிலும் தடுக்கப்படுமா?
வங்கதேசத்தில் ஷரியா சட்டம் நடைமுறைக்கு வருமா?
என்பது போன்ற பல கேள்விகள் இன்னும் விடை காணாத நிலையிலேயே உள்ளன.