ஐயப்பனுக்கான தங்க அங்கி சபரிமலை நோக்கி புனித ஊர்வலம்
சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி, ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலிலிருந்து புனித ஊர்வலமாக சபரிமலைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
எதிர்வரும் 27ஆம் தேதி சபரிமலையில் உலகப் புகழ்பெற்ற மண்டல பூஜை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, ஐயப்ப சுவாமியின் திருவுருவிற்கு தங்க அங்கி அலங்காரம் செய்வது பாரம்பரிய வழக்கமாக இருந்து வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டு மண்டல பூஜையை முன்னிட்டு, ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் பாதுகாக்கப்பட்டு வந்த தங்க அங்கி, சிறப்பு ஊர்வலமாக சபரிமலை நோக்கி புறப்பட்டுள்ளது.
26ஆம் தேதி மாலை நேரத்தில் இந்த ஊர்வலம் சன்னிதானத்தை அடையும். அதனைத் தொடர்ந்து, மாலையில் ஐயப்ப சுவாமிக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடத்தப்படும்.
அடுத்த நாள் மண்டல பூஜை சிறப்பாக நடைபெறவுள்ள நிலையில், இரவு நேரத்தில் சபரிமலை கோயில் நடை அடைக்கப்பட்டு, மண்டல காலம் முறையாக நிறைவு பெறுகிறது.