“உங்களது உழைப்பும், ஆளுமையும் ஆச்சரியப்படுத்துகிறது” — மாரி செல்வராஜை பாராட்டிய ரஜினிகாந்த்!
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய புதிய படம் ‘பைசன் (காளமாடன்)’ விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. படம் வெளியானதிலிருந்து வசூல் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தினை பாராட்டியுள்ளார்.
ரஜினிகாந்த், ‘பைசன்’ படத்தை பார்த்த பிறகு தயாரிப்பாளர் பா. ரஞ்சித் மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் ஆகியோருக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாரி செல்வராஜ் தனது சமூக வலைதளத்தில்,
“சூப்பர் மாரி… சூப்பர்! பைசன் பார்த்தேன். படத்துக்கு படம் உங்களது உழைப்பும், உங்களது ஆளுமையும் என்னை ஆச்சரியப்படுத்துகிறது, மாரி! வாழ்த்துக்கள்,”
என்று ரஜினிகாந்த் கூறியதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் தனது நன்றியை தெரிவித்து,
“‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’ படங்களைப் பார்த்த பிறகும் எனக்கு தொலைபேசியில் அழைத்து பாராட்டியவர் ரஜினி சார். அதேபோல் என் ஐந்தாவது படமான ‘பைசன்’-ஐ பார்த்துவிட்டு என்னையும் ரஞ்சித் அண்ணனையும் மனதார பாராட்டிய சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு, எனது சார்பாகவும் முழு படக்குழுவின் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,”
என்று கூறியுள்ளார்.
‘பைசன்: காளமாடன்’ திரைப்படத்தில் துருவ் விக்ரம், பசுபதி, ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன், லால், அமீர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இசையமைப்பை நிவாஸ் கே. பிரசன்னா மேற்கொண்டுள்ளார்.
படத்தை ஃபைவ் ஸ்டார் செந்தில் தமிழ்நாட்டில் வெளியிட்டுள்ளார்.