“அணியில் சும்மா தொற்றிக் கொள்ளக்கூடாது” – ரோஹித், கோலிக்கு பாண்டிங் ஆலோசனை
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு முக்கிய ஆலோசனை வழங்கியுள்ளார்.
தற்போது ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆஸ்திரேலியாவில் தங்கள் கடைசி தொடர்களில் ஒன்றில் விளையாடி வருகின்றனர். பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இருவருமே பேட்டில் தோல்வியடைந்தனர். அடிலெய்டில் நடைபெறும் இரண்டாவது போட்டியில் சிறந்த ஆட்டம் காட்ட வேண்டும் என்ற ஆவல் இருவரிடமும் உள்ளது.
இதுகுறித்து ஐசிசி ரிவியூ நிகழ்ச்சியில் பேசிய ரிக்கி பாண்டிங் கூறியதாவது:
“எந்த வீரரானாலும் ‘நான் கிரிக்கெட்டில் அனைத்தையும் சாதித்து விட்டேன்’ என்று நினைப்பது தவறு. கடைசி கட்டத்திலும் குறுகிய கால இலக்குகளை வைத்திருக்க வேண்டும்.
ரோஹித், கோலி போன்ற வீரர்கள் சும்மா அணியில் தொற்றிக் கொண்டு 2027 உலகக் கோப்பை வரை நீடிக்கக் கூடாது. விராட் மிகுந்த உற்சாகம் கொண்டவர்; அவர் புதிய இலக்குகளை தானே நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.
இந்தத் தொடரில் நாம் என்ன சாதிக்க முடியும் என்பதை தெளிவாக வரையறுக்க வேண்டும். அடுத்த உலகக் கோப்பைக்காக காத்திருந்து நேரத்தை வீணடிப்பதில் பயன் இல்லை,” என அவர் கூறினார்.
மேலும், பாண்டிங் தொடர்ச்சியாக,
“ரோஹித், கோலியைப் பொறுத்தவரை இருவருமே இந்தியாவின் சிறந்த அணியில் விளையாடுகின்றனர். ஆனால் இப்போதிலிருந்து உலகக் கோப்பை வரையிலான காலத்தில் தங்களின் சிறந்த ஆட்டத்தை மீண்டும் வெளிப்படுத்த முடியுமா என்பது இந்தத் தொடரிலேயே தெரியவரும்,” எனக் குறிப்பிட்டார்.
கடந்த பார்டர்–கவாஸ்கர் டிராபியில் இருவரின் ஆட்டமும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாதது. ரோஹித் ஒரு சதத்துடன் சிறப்பாக விளையாடியிருந்தாலும், கோலி கடந்த எட்டு இன்னிங்ஸ்களில் 90 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
இங்கிலாந்து தொடருக்கு முன்பு இருவருமே டெஸ்ட் மற்றும் டி20 வடிவிலிருந்து ஓய்வு பெற்றனர். தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வரும் அவர்கள், இன்னும் எத்தனை நாள் தொடர்வார்கள் என்பது அவர்களின் ஆட்டத்தைக் கொண்டே தீர்மானிக்கப்படும்.