கோவை சிறுமி படுகொலை: சேலத்திற்கு நேரில் சென்று மத்திய அமைச்சர் எல்.முருகன், நயினார் நாகேந்திரன் ஆறுதல் – “பிஎன்எஸ் (BNS) சட்டத்தின் கீழ் கடும் தண்டனை வழங்க வேண்டும்” என வலியுறுத்தல்!
சேலம்: கோவை மாவட்டம் சூலூரில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமியின் குடும்பத்தினரை, மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜாக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் நேரில் சந்தித்துத் தங்களது ஆழ்ந்த ஆறுதலைத் தெரிவித்துக் கொண்டனர். தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறுமியின் உடல், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம், கொளத்தூர் கிராமத்திற்குக் கொண்டு வரப்பட்டு கண்ணீர் மல்கத் தகனம் செய்யப்பட்டது. அங்குச் சென்ற பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் இருவரும், மகளை இழந்து தவிக்கும் சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்துத் தார்மீக ஆதரவை வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசுகையில், “கோவை சூலூரில் சிறுமிக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதி அராஜகமானது. இந்த வழக்கில் தற்பொழுது இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு நாட்டின் புதிய குற்றவியல் சட்டமான பாரதிய நியாய சன்ஹிதா (BNS – Bharatiya Nyaya Sanhita) சட்டப் பிரிவுகளின் கீழ், எவ்வித தளர்வுமின்றி மிகக் கடுமையான உச்சபட்சத் தண்டனை விரைவாகக் கிடைத்திடத் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” எனத் திட்டவட்டமாகக் கேட்டுக்கொண்டார்.
மத்திய அமைச்சரைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்துக் கவலை தெரிவித்தார். மேலும், “மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அதிர்ச்சியளிக்கிறது. இத்தகைய கொடூரமான குற்றங்களில் ஈடுபடுவோருக்குக் காலதாமதமின்றி உடனடியாகத் தண்டனை கிடைக்கும் வகையில், தமிழக அரசு நடப்புச் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே சிறப்புச் சட்டத் திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும்” என மாநில அரசுக்கு மிகக் கடுமையான வலியுறுத்தலை முன்வைத்தார். இவர்களின் இந்த நேரிடைச் சந்திப்பும் பேட்டியும் தமிழக அரசியல் களத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.




