மழைநீரில் மூழ்கி பாதியாக குறைந்த மகசூல் — டெல்டா விவசாயிகள் கவலை வெளிப்பாடு
நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள், மழைநீரில் மூழ்கி சேதமடைந்ததால் மகசூல் பாதியாக குறைந்துள்ளது என்று நாகை மாவட்ட விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்தாண்டு நாகை மாவட்டத்தில் சுமார் 1.20 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. ஆனால், வடகிழக்கு பருவமழை காரணமாக பல இடங்களில் வயல்களில் மழைநீர் தேங்கி நெற்பயிர்கள் சாய்ந்து, சில இடங்களில் நெல்மணிகள் முளைத்தும் அழுகியும் காணப்படுகின்றன. இதனால் பெரும்பாலான பாசனப் பகுதிகளில் மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மழைக்கு முன் சுமார் 80 சதவீதம் வரை அறுவடை முடிந்திருந்தாலும், மீதமுள்ள வயல்கள் மழை காரணமாக 10 நாட்களுக்கு மேலாக நீரில் மூழ்கியிருந்தன. தற்போது மழை குறைந்ததையடுத்து, திருக்குவளை, சுந்தரபாண்டியம், நெய்விளக்கு, வடபாதி, கீரங்குடி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் இயந்திரங்களின் உதவியுடன் இரவு பகலாக அறுவடைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கெனவே புகையான் நோயால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள், இப்போது மழையினால் மேலும் சேதமடைந்துள்ளதால், மகசூல் பெரிதும் குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். கடந்தாண்டு ஒரு ஏக்கருக்கு குறைந்தது 30 மூட்டைகள் வரை மகசூல் கிடைத்திருந்த நிலையில், இப்போது 10 முதல் 15 மூட்டைகள் வரை மட்டுமே கிடைக்கிறது என கூறப்படுகிறது.
இதனால் ஏக்கருக்கு ரூ.30,000 வரை நட்டம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாகவும், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடி இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் டெல்டா மாவட்ட விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.