தமிழில் டைரக்டராக அறிமுகமாகிறார் ஷாலின் ஜோயா
‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகை ஷாலின் ஜோயா, தற்போது தமிழில் இயக்குநராக அறிமுகமாகிறார்.
முன்னதாக, மலையாளத்தில் அவர் இயக்கிய ‘தி ஃபேமிலி ஆக்ட்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, அவர் தமிழில் இயக்கும் புதிய படம் ஆர்.கே. இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிறது.
இந்தப் படத்தை ராமகிருஷ்ணா தயாரிக்கிறார். இதில், ‘நக்கலைட்ஸ்’ அருண் ஹீரோவாகவும், பிரிகிடா ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். மேலும் எம்.எஸ். பாஸ்கர், அருள்தாஸ், இளவரசு, ஜாவா சுந்தரேசன், ஜென்சன் திவாகர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இதுவரை பார்க்காத வித்தியாசமான வேடத்தில் தேவதர்ஷினி நடித்துள்ளதுடன், அஷ்வின் காக்குமனு கவுரவமான கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்.
இப்படம் குறித்து இயக்குநர் ஷாலின் ஜோயா கூறியதாவது:
“இந்தக் கதை 1990களின் இறுதியிலும் 2000களின் தொடக்கத்திலும் நடக்கிறது. ஒரு சிறிய கிராமத்தில் நடைபெறும் சம்பவம் அங்குள்ள மக்களின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றுகிறது என்பதை நகைச்சுவை மற்றும் ஃபேன்டஸி கலந்து சொல்லியிருக்கிறோம். திறமையான நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
இப்படத்துக்கு கே. ராம்சரண் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.