கோவை சிறுமி படுகொலை: பாதிக்கப்பட்ட பெற்றோரைக் தொலைபேசியில் அழைத்து ஆறுதல் கூறினார் முதலமைச்சர் ஜோசப் விஜய் – குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்க உறுதி!
சென்னை: கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரைத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரிடையாகத் தொலைபேசி (Cell Phone) மூலம் தொடர்புகொண்டு தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய இரண்டு முக்கியக் குற்றவாளிகளைப் போலீஸார் ஏற்கனவே அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில், முதலமைச்சரின் இந்த நேரடித் தொடர்பு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குப் பெரும் ஆறுதலை அளித்துள்ளது.
பெண்களுக்கு எதிரான இத்தகைய கொடூரமான குற்றங்களில் ஈடுபடுவோருக்குச் சட்டத்தின் முன் கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும் என்று முதலமைச்சர் விஜய் ஏற்கனவே தனது அதிகாரப்பூர்வ அறிக்கையின் வாயிலாகத் திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, இன்று பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் அலைபேசி வாயிலாகப் பேசிய முதலமைச்சர், தங்களது உயிருக்குயிரான மகளை இழந்து அளவிட முடியாத துயரத்தில் வாடும் அவர்களுக்குத் தார்மீகத் துணையாகத் தமிழக அரசு என்றும் இருக்கும் என்று உருக்கமாகக் கூறினார்.
மேலும் இக்கலந்துரையாடலின் போது, “இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட சமூக விரோதிகளுக்கு நீதிமன்றத்தின் மூலம் மிக விரைவில் சட்டப்படி உச்சபட்சக் கடுமையான தண்டனை கிடைப்பதற்கான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எனது தலைமையிலான அரசு போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட்டுள்ளது; குற்றவாளிகள் எக்காரணம் கொண்டும் தப்பிக்க முடியாது” என்று பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் மிக உறுதியான வாக்குறுதியை அளித்துள்ளதாகக் கோட்டை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



